சகல தோஷங்களையும் நீக்கும் தலங்கள்

* அனந்தபத்மநாபன் சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு எனும் தலத்தில்அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் பகலவனைக் கண்ட பனி போல் விலகுகிறது.

* திருவையாறு - கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திங்களூர். இத்தல சந்திரபகவானை வணங்கினால் சந்திரகிரக தோஷங்கள் நீங்கி அவர் வாழ்வில் தன்னொளி வீசுகிறது.

* மதுரையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திர ரத வல்லப பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.

* கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு கிரக தோஷங்கள் நீங்கிவிடும்.

* 64திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகியோடி பொன்னான வாழ்வு கிட்டும்.

சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நதி கொண்டிருக்கும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பில்லி சூன்ய தோஷங்கள் விலகியோடுகின்றன.

* ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்கினால் சுக்கிர கிரக தோஷங்கள் தொலைந்து மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

* காஞ்சிபுரத்தில் அருளும் சித்ரகுப்த சுவாமியை மனமுருக வேண்டினால் கேது கிரக தோஷங்கள் மறையும்.

* காஞ்சிபுரம் - வேலூர் பாதையில் தனிக்கோயில் கொண்டுள்ள பள்ளூர் வாராஹியை வணங்க, செவ்வாய் கிரக தோஷங்கள் தொலைந்தோடும்.

* சென்னை கும்மிடிப்பூண்டி சாலையில் செங்குன்றத்தை அடுத்துள்ள பஞ்சேஷ்டியில் ஆனந்த வல்லியம்மன் பாதத்தில் உள்ள சப்தசதி மகாயந்திரத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த யந்திரத்தில் எலுமிச்சம் கனிகள் வைத்து வணங்க திருமண தோஷங்கள் நீங்குகின்றன.

* கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்துகொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.

* சென்னை தாம்பரம் அருகே படப்பை - காஞ்சிபுரம் சாலையில் உள்ள கண்டிகை கிராமத்தில் மாமேரு, மாதங்கி, வாராஹி, திதிநித்யா தேவிகள் யந்திர உருவில் அருள்கின்றனர். தொடர்ந்து  9 வாரங்கள் இவர்களை தரிசிக்க அனைத்து வித தோஷங்களும் நீங்குகின்றன.

* கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும், முல்லைவனநாதரும் கர்ப்பத் தடை தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்கள்.

* சென்னை ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தரித்திர தோஷம் தொலைந்து வளமான வாழ்வு கிட்டுகிறது.

* திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள பெரமண்டூர் அணியாத அழகர் கோயிலில் அருளும் தர்மதேவிக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், 9 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்ற, அத்தோஷங்கள் தொலைகின்றன.

* ராமநாதபுரம், தேவிப்பட்டணத்தில் ராமரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு கடல்நடுவே அருளும் நவகிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் போக்கியருளும் சக்தி படைத்தவர்கள்.

* நீத்தார் கடன் செய்ய மறந்தவர்கள் அல்லது தவறியவர்கள் காஞ்சிபுரம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும், திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாளையும் தரிசித்தால் அந்த தோஷங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.

* ஈரோடு திருப்பாண்டிக் கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் தலம் மும்மூர்த்தித் தலமாகவும் சகல தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வன்னி மரத்தின் கீழ் அமர்ந்த நான்முகனுக்கு மூன்று முகங்கள் மட்டுமே உண்டு. வன்னிமரமே நான்காவது முகமாகக் கருதப்படுகிறது.

* திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்குவதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

Related Stories: