ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்துள்ள பான் இந்தியா படம், ‘மைக்கேல்’. திவ்யான்ஷா கவுஷிக், வருண் சந்தோஷ், அய்யப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி நடித்துள்ளனர். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியுள்ளார். நாளை திரைக்கு வரும் இப்படம் குறித்து சந்தீப் கிஷன் கூறுகையில், ‘இசை அமைப்பாளர் சாம் சி.எஸ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும்.
இப்போதுள்ள இடத்தை விட மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும். இதில் அவரது பின்னணி இசைக்கான உழைப்பு அபாரமானது. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியுடன் சேர்ந்து பயணித்ததில் பெருமகிழ்ச்சி. மொழிகளை எல்லாம் தாண்டி ஹீரோயின் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். நான் நடிக்க வருவதற்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன்.
இப்போது அவருடன் இணைந்து நடித்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அதாவது, குருவுடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளேன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான் நடித்து வெளியான ‘மாநகரம்’ படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படுமா என்று தெரியவில்லை. ஆனால், ‘மைக்கேல்’ 2ம் பாகம் விரைவில் உருவாகும்’ என்றார்.