புத்தாண்டை எப்படிக் கொண்டாடி வரவேற்பது?

தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது. சார்வரி வருடம் முடிந்து பிலவ வருடம் பிறந்துவிட்டது. நாம் மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் தமிழர்களும், குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் சித்திரை மாதத்தின் முதல் நாளைக்  கொண்டாடுகின்றனர்.

பங்குனியின் இறுதி நாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் ‘‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு ‘‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாகக் கருதப்பட்டது.பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருட கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் ராசி என்ற குறிப்பு இருக்கிறது.திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” (வரி 160-161”)தமிழ்ப் பஞ்சாங்கங்களில், ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.இந்த நாளில் நாம் என்ன செய்கிறோம். வீடு, வாசலைச் சுத்தம் செய்கிறோம். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்து வழிபடும் மரபு தொன்று தொட்டு இருக்கிறது. அதிகாலையில் நீராடி , புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், அநேகமாக எல்லாக் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள்  நடைபெறுவதும் வழக்கம்.

அன்றைய சமையலில் வடை பாயசம் இருந்தாலும், வேப்பம்பூ பச்சடியும், மாங்காய்ப் பச்சடியும் சமைப்பது  மரபாகும்.சித்திரையில் மா மரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. வாழ்க்கையின் ஆழத்தையும் இயல்பையும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதை, இந்த சமையல் குறிப்பே உணர்த்திவிடும்.

சரி; புதிய வருடம் பிறந்துவிட்டது. வருடம் மட்டுமா புதியதாகப் பிறக்கிறது. மனிதர்களும் பிறந்துகொண்டே இருக்கின்றார்கள். இது என்ன வேடிக்கை என்று நினைக்கலாம். யோசித்துப் பார்த்தால் நேற்று உள்ள நீங்கள், இன்றைக்கு இல்லை. அறிவியல் பூர்வமாகவும் இதை நாம் சொல்லலாம். உங்கள் உடம்பில் உள்ள அடிப்படையான விஷயம் செல்கள்.

செல்களால் கட்டப்பட்டதுதான் இந்தத் தேகம். செல்கள் உயிரோடு இருந்தால், நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். செல்கள் மரணித்துவிட்டால் நீங்களும் இறந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உடம்பிலே செல்கள் இறப்பதும் பிறப்பதும் (மெட்டாபாலிசம் எனும்) வளர்சிதை மாற்றம் நிகழ்வு நடந்துகொண்டே இருக்கிறது.

அதுதான் இயக்கம். பிரபஞ்சத்திற்கும் இதுவே விதி. அண்டத்தில் இருப்பதுதானே பிண்டத்திலும் இருக்கும்.  உயிரோடு இருக்க இந்த இயக்கமே காரணம். நேற்று உங்கள் உடம்பிலிருந்து செல்கள் எல்லாம் அழிந்து அதன் தொடர்ச்சியாக புதிய செல்கள் தோன்றுவதால், நீங்கள் நேற்று உள்ள மனிதர் இல்லை.

அதனால் பாரதி பாடுவான்.

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி யின்புற்றிருந்து வாழ்வீர்;

தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா

திருவள்ளுவர் ஒரு அருமையான குறளிலே இந்தக் கருத்தைச் சொல்லுகின்றார். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு.

நேற்று இருந்தான் இன்று இறந்தான் என்பதே இவ்வுலகத்தின் பேரியல்பு. பெருமை என்பதை உலகின் பேரியல்பு என்று உரை செய்தார்கள். இதை, இன்னும் விளக்கமாக சான்றோர்கள் ஆராய்ந்தனர். மனிதனின் மரணம் உலகிற்குப் பெருமையல்ல. வள்ளுவர் மரணம் பற்றிப் பேசவில்லை. ‘நேற்று இருந்தவன் வேறு; இன்று இருப்பவன் வேறு’ - பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். நேற்று அவன் கல்லாக இருந்திருக்கலாம்; இன்று சிற்பமாக மாறியிருக்கலாம்.

நேற்று அவன் முள்ளாக இருந்திருக்கலாம்; இன்று மலராக ஆகியிருக்கலாம். ஆயிரம் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது வாழ்க்கை என்றும் ‘இன்று புதிதாய்ப் பிறத்தல்’ என்பதையும் குறிப்பாக உணர்த்தலாம்; பிறப்பும் இறப்பும் மனிதனுக்கு வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழ்வன அல்ல. ஒரே பிறவியில் மனிதன் பலமுறை பிறக்கிறான்; பலமுறை இறக்கிறான். புதிது புதிதாய்ப் பிறப்பெடுக்கிறான் என்றும் பொருள் கூறினர். அறிவியல் பூர்வமாக இதற்கு இன்னும் மேம்பட்ட விளக்கத்தையும் சிந்தித்தால் நமக்குப் புரியும்.

நேற்று இருந்த மனிதன் இன்று இல்லை. ஆம்; நேற்று எந்தெந்த செல்களினால்  அவன் உருவாகி இருந்தாலும், அந்த செல்கள் எல்லாம் மறைந்துவிட்டன. புதிய செல்களினால் கட்டப்பட்ட ஒரு புதிய மனிதனாகத் தான் இன்றைக்கு இருக்கின்றான். இந்த வளர்சிதை மாற்றமானது அவன் இறக்கும் வரை நடந்துகொண்டே இருக்கும்.

ஒருவன் இறந்து விட்டான் என்கிறோம்.

நமது சமய மரபிலே மரணம் என்று ஒன்று இல்லை.

மாற்றம்தான் இருக்கிறது.இதை சிவபுராணத்திலே மணிவாசகர் பாடுவார்.புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

இறத்தல் என்பது ஒரு காலக் கணக்குதான். ஒரு மனிதனுடைய வாழ்க்கையானது பணம், காசு, பதவி ,அழகு இப்படி பல பல விஷயங்களால் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக அவன் காலக்கணக்கினால் மட்டுமே குறிப்பிடப்படுகின்றான்.அசோகரின் காலம் ஒரு காலக்கணக்கு. அரிச்சந்திரன் காலம் ஒரு காலக் கணக்கு. ஒரு மனிதனுடைய காலம் என்பது இந்த உலகத்தோடு தொடர்பு உடையது. மண்ணில் விழுந்து, மூச்சு இழுத்த நேரத்தை(in) நாம் பிறப்பு  என்று எடுத்துக் கொண்டால், அவன் இந்த உலகத்திலே வாழ்ந்து, மூச்சை விட்ட நேரத்தை(out) இறப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

வாழ்நாள் என்பது இந்த இரண்டிற்குமான இடைக்காலம்தான்.கபீர்தாசர் சொல்வார்.ஒரு மனிதனின் ஆயுள். ‘‘போன மூச்சுக்கும் வந்த மூச்சுக்குமான காலம்தான்”மனிதன் முழுமையாகப் பிறந்து பிறந்து இறக்கின்றான். தினந்தோறும் கூட.புனரபி ஜனனம் புனரபி மரணம்.உலகம் சுழல்வதைப்போல, காலமும் சுழன்றுகொண்டே இருப்பதைத்தான், இந்த வருட பிறப்புச் சிந்தனையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதோ திங்கட்கிழமை. இந்தத் திங்கட்கிழமை அடுத்த ஏழு நாட்களில் வரும். திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கும். ஆனால், ஒவ்வொரு திங்களும் ஒரு அனுபவம். ஒரு திங்கள்தான். ஒரே மாதிரியான திங்கள் அல்ல.

இந்த மாதம் சித்திரை மாதம். இந்த சித்திரை மாதம். திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும். ஒரு சித்திரையில் பள்ளிக்கூடம் சென்றிருப்பீர்கள்.

ஒரு சித்திரையில் ஏதோ ஒரு துக்க நிகழ்வு நடந்திருக்கும்.ஒரு சித்திரையில் திருமணம் நடந்திருக்கும்.எல்லாம் ஒரே சித்திரை அல்ல.

இதோ இந்த ஆண்டு பிலவ ஆண்டு. அறுபது வருட சுழற்சியில் 35 வது ஆண்டு. இந்த ஆண்டும் திரும்பத்திரும்ப வரும். ஆனால், இந்த பிலவ ஆண்டை அதிகபட்சம் மனித வாழ்க்கையில் ஒருமுறைதான் திரும்பவும் சந்திக்க நேரும்.

60 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த பிலவ ஆண்டை முதல் முறையாகச் சந்திக்கிறார்கள். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள், இந்த பிலவ ஆண்டை  இரண்டாம் முறையாகச் சந்திக்கிறார்கள்.மூன்றாம் முறையாகவும் இந்த பிலவ ஆண்டைச் சந்திக்க வேண்டும் என்றால், ஆயுள் 120 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமற்றது.

நாம் மனிதர்களை வாழ்த்தும்பொழுது. அதிகபட்சம் 100 ஆண்டுகள் வாழ்க. என்று வாழ்த்துகின்றோம். ( சதமானம் பவதி)

தொண்டரடிப்பொடியாழ்வார், வேதநூல் பிராயம் நூறு மனுஷர்தான் புகுவரேலும் என்று நூறு ஆண்டுகள் மனிதன் வாழ்வதே கூட கடினம்தான் என்று சந்தேகமாகச் சொல்கின்றார்.

இந்தக்கால கணிதத்தைத் தெரிந்துகொள்வது எதற்காக? என்ற கேள்வி எழலாம். காலத்தை முறையாகப் புரிந்து கொண்டால்தான் ஞாலத்தில் நம்மால் சிறப்பாக வாழ முடியும். புத்தாண்டு என்று சொன்னாலே, நம்முடைய மரபிலே பஞ்சாங்கம் வைத்து படைப்பார்கள். ஒரு காலத்தில் எல்லோருக்கும் பொதுவாக பஞ்சாங்கம் கோயிலிலே வாசிப்பார்கள். இதற்கு பஞ்சாங்க படனம் என்று பெயர்.இந்த பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொண்டால், காலத்தின் தன்மையை மனதில் வாங்கிக் கொண்டு, தனக்குரிய மேன்மையை, மனிதன் தேடிக்கொள்ள முடியும்.

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்ஞாலத்தின் மாணப் பெரிது என்றார் குறளாசிரியர்.காலத்தினால் மனிதர் மனிதர்களுக்கு செய்கின்ற உதவி என்பதைவிட, இதில் இன்னொரு கோணமும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். காலத்தினால் செய்த உதவி என்பதை, உதவி செய்யும் காலத்தினால் என்று எடுத்துக்கொண்டால், காலமானது மனிதர்களுக்கு அல்லது உயிர்களுக்கு, எத்தனை உதவிகள் செய்கின்றது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம்

கார்காலத்தில் மழை பெய்யும். பனிக்காலத்தில் பனி பெய்யும். கோடைகாலத்தில் வெயிலடிக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் உதிரும். வசந்த காலத்தில் இலைகள் மறுபடியும் பிறக்கும். இது ஒரு சுழற்சிமுறை. காலம் யாரையும் ஏமாற்றுவது கிடையாது.

மனிதர்களுக்கு, காலத்தை ஒட்டி, இதை இதைச் செய்; நான் உனக்கு உதவுகிறேன் என்று சொல்வதால், உதவி செய்யும் காலத்தினால் என்று எடுத்துக் கொள்ளலாம். காலத்திற்கு இருப்பதைப் போலவே மனிதர்களுக்கும் பருவங்கள் இருக்கின்றன. அந்தந்தப் பருவத்தில் அதை அதைச் செய்ய வேண்டும். உதாரணமாக ஒருவனுக்கு குழந்தைப் பருவம், பாலர் பருவம், வாலிபப் பருவம், கிழப் பருவம் என்று பல பருவங்கள் வரும். குழந்தையை வாலிபனாக்குவதும், வாலிபனை கிழவன் ஆக்குவதும் காலம். ஒரு மனிதனின் நிலையை,காலத்தை வைத்துத்தான் சொல்ல முடியும் நீங்கள் ஒருவரின் பெயரைச் சொல்லி, ஐந்து வயது என்று சொன்னால் அவர் குழந்தை.

15 வயது என்று சொன்னால் வாலிபன். 30 வயது என்று சொன்னால், அவன் நடுத்தர வயதுள்ள மனிதன். 60 வயது என்று சொன்னால் கிழவன் என்று, காலத்தை வைத்து, அவன் எந்தப் பருவத்தில் இருக்கிறான் என்பதைச் சொல்லிவிடலாம். காலத்தை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பது காலத்தின் இன்னொரு சிறப்பு.ஒவ்வொருவர் வாழ்க்கையையும் காலம் தான் தீர்மானிக்கிறது. காலத்திலும் மூன்று வகை உண்டு. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் இணைந்து, ஒரு பயணத்தை - (வாழ்க்கையை) - குறிப்பிடு வதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

கடந்த காலம் என்பது காலத்தின் பிரயாணத்தைக் குறிக்கிறது. காலம் எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பதாலே, காலத்தை யாரெல்லாம் எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறீர்களோ, அப்படி அப்படி அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுகிறார்கள்.

இங்கே பலரும் பேதத்தைப் பார்க்கிறோம்.

(எனக்குக் காலம் (நேரம்) சரியில்லை. அவனுக்குக் காலம் துணை செய்கிறது. ஓஹோ என்று வந்து விட்டான்.) ஆனால், காலத்தைப் பொறுத்தவரையிலே அது அபேதமாகவே இருக்கிறது. அது யாருக்கும் பேதத்தைக் காட்டுவதில்லை. பருவகாலங்கள் எல்லோருக்கும் பொதுவானது. ஒரு நாளின் நேரம் எல்லோருக்கும் பொதுவானது. இந்த அபேதத்தை மனிதன் புரிந்து கொண்டால்தான் பேதமின்றி வாழ முடியும். காலத்தில் நல்ல காலம், கெட்ட காலம் என்றெல்லாம் சொல்கின்றோம்.நாம் ஆழ்ந்து சிந்தித்தால், காலத்தில்  நல்ல காலம், கெட்ட காலம் என்றெல்லாம் இல்லை.

யார் ஒருவருக்கு நல்ல காலமோ, அது இன்னொருவருக்குக்  கெட்ட காலமாக இருந்து விடக்கூடும். உதாரணமாக, இந்த நாளை எடுத்துக்கொண்டு, ஒரு ஆயிரம் பேருக்கு இந்த நாளிலே என்னென்ன நடந்தது என்பதை, உங்களால் ஒரு கணக்கீடு செய்ய முடியும் என்று சொன்னால், ஆயிரம் பேருக்கும் இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்க முடியாது. சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும், சிலருக்கு துக்கமாக இருந்திருக்கும்.

அதுபோலவே சுபநாட்களை நாம் தேர்ந் தெடுக்கிறோம். முழுமையான சுப நாட்கள் கிடையாது. முழுமையான கெட்ட நாட்களும் கிடையாது. நாட்களிலே பல குறைபாடுகள் இருக்கவே செய்யும். இதில் இன்னொரு விஷயத்தையும் பார்க்கலாம். ஒருவருக்கு சுபமான நாளாக

இருக்கக்கூடிய நாள், இன்னொருவருக்கு  சுபமான நாளாக இருப்பது கிடையாது. ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து விட்டால், அந்த நாளில் இருக்கக்கூடிய தோஷங்களை விலக்குவதற்காக  மந்திரப் பிரயோகம் செய்து வைத்தார்கள்

ததேவ லக்னம் சுதினம் ததேவ

தாராபலம் சந்திரபலம் ததேவ

வி த்யா பலம் தெய்வபலம் ததேவ

லக்ஷ்மீ பதேங்கிரி யுக்மம் ஸ்மாரமி  

காலத்தை பகவானின் திருவடியில் விட்டுவிட்டு காரியம் செய் என்று சொல்லுகின்ற அற்புதமான ஸ்லோகம் இது. திருமகள் நாதன் திருவடியை வணங்கி விட்டால், காலத்தின் குறைகளை அவன் மாற்றி விடுவான் என்பதற்காகத்தான் தெய்வ வழிபாடுகள். அதுதான் இந்த ஸ்லோகத்தில் வெளிப்படுகின்றது.இந்த நாள் நன்மையான நாளாகஅமையட்டும்.

இந்த நாளில் இந்த காரியம் நடக்கக் கூடிய லக்கினம் நல்ல லக்கினமாக அமையட்டும். இந்த நாளில் ஒருவருக்கு தாராபலம் சந்திரபலம் நல்ல விதமாக அமையட்டும். (பல நேரங்களில் தாராபலம் சந்திரபலம் இரண்டும் சரியாக அமைவது கிடையாது. ஒன்று அமைந்தால் ஒன்று அமையாது  என்பது  ஜோதிடர்களுக்குத்  தெரியும்)இவை எல்லாம் நன்மையாக அமைய வேண்டும் என்று சொன்னால், தெய்வபலம் நன்மையாக அமையவேண்டும்.

தெய்வ பலத்தை நம்பித்தான் காலமும் காலக் கணிதமும் உலகமும் உயிர்களும் இருக்கின்றன.

காலம் கடந்த பின்னும் ஒருவரை நிலை நிறுத்துவது தெய்வபலமும், தெய்வபலத்தின் அடிப்படையில் அவன் செய்த செயல்களும். காலத்தைக் கட்டுப்படுத்துகின்ற அந்தத்  தெய்வத்தைத்  துதிப்போம். புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

Related Stories: