கோலாகல வாழ்வருளும் கோபாலசுந்தரி

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் அன்னை ராஜராஜேஸ்வரியை பக்தர்கள் பல்வேறு வடிவங்களில் ஆராதிக்கின்றனர். தேவியின் திவ்யமான  பல்வேறு வடிவங்களுள் கண்ணனின் ஸ்ரீவித்யா ராஜகோபால மந்திரமும் லலிதையின் காதிவித்யா மந்திரமும் சம்மேளமான கோபாலசுந்தரியின் திருவடிவமும் ஒன்று. இத்திருவடிவத்தில் கண்ணனே லலிதா திரிபுரசுந்தரியாகவும் லலிதா திரிபுரசுந்தரியே கண்ணனாகவும் அருட்கோலம் காட்டியருள்கின்றனர். இத்தேவியின் தியானத்தில் திருப்பாற்கடலிலுள்ள கற்பகவனத்தில் நவரத்தின மண்டபத்தின் நடுவில் ஸ்ரீபீடத்தில் எழுந்தருளி சங்கு, சக்கரம், புல்லாங்குழல், கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம் போன்றவற்றை ஏந்தி பிரம்மாதி தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவளுமான கோபாலசுந்தரியைப் போற்றுவோமாக எனக் கூறப்பட்டுள்ளது.

பூர்வஜென்மத்தில் செய்த சிறந்த புண்ணியத்தின் பயனாகவே இந்த ஜன்மாவில் கோபாலசுந்தரியை உபாசிக்கும் பாக்கியம் கிட்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மூவுலகங்களிலுமுள்ள மந்திரங்கள் அனைத்திற்கும் ஸ்ரீவித்யா தலைமை மந்திரமாக போற்றப்படுகிறது. அவ்வளவு உயர்ந்த ஸ்ரீவித்யா மந்திரமான பஞ்சதசாக்ஷரீ மந்திரம் கண்ணனின் ராஜகோபால மந்திரத்துடன் சம்மேளமானதே கோபாலசுந்தரி மந்திரம். கண்ணனை கேசவன் என்றும் அழைப்பர். ‘க’ என்றால் அயன், ‘ஈச’ என்றால் அரன். அயனையும் அரனையும் தன்னுள் கொண்டவன் கேசவன். அய னுக்குத் தன் நாபியில் இடம் தந்து, அரனுக்குத் தன் வலப்பாகத்தில் பாதி இடம் தந்திருப்பதால் நாராயணனாம் கண்ணனை சங்கரநாராயணன் என்று  வழிபடுகின்றனர். சங்கரனும் சங்கரிக்குத் தன் இடப்பாகத்தை அளித்து அர்த்த நாரீஸ்வரனானான். அர்த்த நாரீஸ்வரனாம் அரன், அரியில் பாதியாக  இணைந்து சங்கரநாராயணன் ஆகும்போது பராசக்தியாம் லலிதையும் கண்ணனோடு பாதியாய் இணைந்து கோபாலசுந்தரியாக வழிபடப்படுகிறாள்.

உமாமகேஸ்வரனை வணங்கினால் நாராயணனை வணங்குவதே ஆகும். சங்கர நாராயணனாக இருப்பதால் அரியைப் பூஜித்தால் அரனை பூஜிப்பதாகவே ஆகும். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலயத்தில் அருளும் கண்ணன், இத்தேவியின் வடிவமாகவே போற்றப்படுகிறார். உற்சவ ராஜகோபாலனின் திருவ டியின் கீழ் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. த்ரிபங்க நிலையில் லலிதையைப் போன்றே அருட்கோலம் கொண்டுள்ளவர் இந்த மூர்த்தி. நாணயத்தின் ஒரு பக்கமான தலை நமக்குத் தெரிந்தால், அதன் மறுபக்கத்தில் பூ இருக்கவே செய்யும். ஆனால், தலை தெரியும்போது பூ நம் கண் ணில் படுவதில்லை அதைப்போல கண்ணனை வழிபடும்போது லலிதையும், லலிதையை வழிபடும் போது கண்ணனும் மறைந்துள்ளனர். பூரண   ஞானமுடையவர்கள் இவ்விருவரையும் ஒன்றாகவே பாவித்து வழிபடுவர்.

லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுத திருவுளம் கொண்டார் ஆதிசங்கரர். ஒரு பொன்காலைப் பொழுதில் தன் ஆசிரமத்திற்கு வெளியே அமர்ந்திருந்த அவர், தன் சீடர் ஒருவரிடம் ஆசிரமத்தினுள் சென்று லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ள  ஓலைச்சுவடியை எடுத்து வரப் பணித்தார். குருவின் வாக்கை சிரமேற்கொண்ட சீடன் உள்ளே சென்று அச்சுவடியை எடுத்து வந்து ஆதிசங்கரரிடம்  அளித்தான். அது லலிதா ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடியல்லாமல் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடியாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதே போன்று  விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடியையே அச்சீடன் எடுத்து வந்தான். ஏன் இப்படி நடக்கிறது என ஆதிசங்கரர் தியானம் செய்ய, அவர் புருவமத்தியில் தேவி தோன்றி முதலில் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு உரை எழுது.

பின்னரே என் ஸஹஸ்ரநாமத்திற்கு உரை எழுத வேண்டும் என்று திருவாய்  மலர்ந்தருளினாள். இதிலிருந்து தேவியே திருமாலுக்கு அளித்த முக்கியத்துவம் உணரப்படுகிறது. ஆதிசங்கரர் எழுதிய அம்பிகை சம்பந்தமான நூல்களில் தலையாயதாகத் திகழ்வது ஸௌந்தர்யலஹரி. நூறு ஸ்லோகங்களைக் கொண்ட இந்நூல்  அம்பிகையின் மேன்மையைப் போற்றிப் பாடுகிறது. இதற்கு விளக்கவுரையைப் பல மகான்கள் எழுதியுள்ளனர். ஆனந்தகிரி என்பவர் இந்நூலுக்கு எழு திய விளக்கவுரைக்கு கோபாலசுந்தரி என்றே பெயர். இந்நூல் அம்பிகையையும் அவள் வடிவான கோபாலனையும் போற்றுவதாக அவர் அதில் விளக்கியருளியுள்ளார். கண்ணனைப் போற்றினால் அம்பிகையைப் போற்றுவதாகும். சக்தி வழிபாடே கிருஷ்ண உபாசனை. கோபாலசுந்தரியாகப் பிரகாசிப்பதால் தெய்வங்களில் வேறுபாடும், குறையும் காணக் கூடாது என்பதே மறைபொருளாகும்.

தான் எடுக்கும் ஒவ்வொரு திருவடிவத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு பலனை தன் உபாசகர்களுக்கு அருள்கிறாள் தேவி. அலுவலகத்திலுள்ளபோது நிர்வாகமும் உடையும் வேறு. வீட்டிலுள்ள போது நிர்வாகமும் உடுப்பும் வேறு. அங்கு தொழிலாளி. இங்கு குடும்பத் தலைவன். இடத்திற்கும் பெயருக்கும் ஏற்ப பெயர்களில்தான் வித்தியாசம். வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே ஞானம் என்பதை தேவியின் இத்திருவுருவம் உணர்த்துகிறது. லலிதையின் கரும்பு வில் காமீகாந்தனின் பாதத்தில் நிலை பெற்று காமாக்னி தோன்றுவது, காமம் இல்லையேல் உலகமில்லை, சிருஷ்டியும் இல்லை என்பதை உணர்த்துகிறது. அடியார்களின் காமங்கள் எனும் விருப்பங்களைத் தப்பாமல் நிறைவேற்றுவதாலும், யாவரும் விரும்பும் அதிசுந்தரத் திருமேனி கொண்டதாலும் கோபாலனாம் கோபாலசுந்தரி, காமீ காந்தா  எனப் போற்றப்படுகிறாள். திருமாலுக்குப் பற்பல நாமங்கள். விருப்பம் எதுவாயினும் உண்மையாக எளிதில் நிறைவேறுவதால் அவன் ஸத்யகாமன்.  முக்தியை விரும்புவோரின் காமங்களையும் துயர் புரிவோரின் காமங்களையும் அழிப்பதால் காமஹா;

காமனாகிய பிரத்யும்னனின் பிதா என்பதாலும்  சாத்வீகர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாலும் காமக்ருதன், பக்தர்களுக்கு காமங்களை அவர்கள் வேண்டியதற்கும் விரும்பியதற்கும் மேலாக  அளிப்பதால் காமப்ரதன் எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் காமபாலன், அடியார்களின் காமங்களைத் தப்பாமல் நிறைவேற்றுவதாலும் யாவரும்  விரும்பும் அதியற்புத சுந்தரத் திருமேனி கொண்டதாலும் காமீகாந்தன் லலிதையை காமாட்சி, காமேஸ்வரி, காமசுந்தரி எனப் போற்றுகின்றனர் உபாசகர்கள். ஆண் பிள்ளையை சிறுமியாக வேடமிட்டு ரசிப்பது போல்  கோபாலனே கோபால சுந்தரியாக உருவெடுத்த பேரழகினை உபாசித்து ஆனந்தம் அடையலாம். நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் இந்த  கோபாலசுந்தரியை ஸம்மோஹனகிருஷ்ணன் எனும் திருப்பெயரில் தரிசித்து அருள் பெறலாம்.

சிவசக்தி ஐக்கிய வடிவான அர்த்தநாரீஸ்வர வடிவம் அடியார்களுக்கு அருள்வது போல் கண்ணனும் லலிதையும் கோபாலசுந்தரியாக அடியவர்க்கு  அருள்கின்றனர். கண்ணனும் தேவியும் ஒன்றே என்பதை ‘கோப்த்ரீ கோவிந்த ரூபிண்யை நமஹ’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமமும் போற்றுகிறது. இந்த கோபாலனும் சுந்தரியும் இணைந்த திருக்கோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.  மழலை வரம் வேண்டுவோர்க்கு தப்பாமல் அந்த வரம் பூர்த்தியாகும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும். அனைத்து சம்பத்துக்களையும் அளிக்கும். சகல சித்திகளும் கைவரும். தரித்திரர்கள் இத்தேவியை உபாசித்தார்களானால், குபேர வாழ்வு பெறலாம்.

தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ இந்த கோபாலசுந்தரியின் யந்திரத்தை எழுதி ரட்சையாக அணிந்து கொள்பவரை அனைவரும் கொண்டாடுவர். அரசர்கள் வசமாவர்.  கந்தர்வர், யக்ஷர், ராக்ஷஸர்கள், பிசாசுகள், லாகினீ, துஷ்டகிரகங்கள், சாகினீ, டாகினீக்கள், பைரவ கிரகங்கள் எல்லாம் அந்த ரட்சையை அணிந்தவ ரைக் கண்டாலே வணங்கி கௌரவிப்பார்கள். பூரண அலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து கருணை மழை பொழியும் கண்களோடும் ரத்ன  கிரீடமும் மயில்பீலியும் தரித்து அருளும் கோபால சுந்தரி, வணங்குவோர் தீவினைகளை அகற்றி ஆத்மஞானமும் அருள்பவள். ஷட்கோண யந்திரத்தில் ஓங்காரமாகவும் ஒய்யாரமாகவும் நின்று குழலூதி உலகைக் காக்கும் கோபாலசுந்தரியைப் பணிந்து சகல நலன்களையும்  பெறுவோம்.

 

ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்

Related Stories: