மயங்கியவருக்கு உதவிய சோனு சூட் : துபாய் விமான நிலையத்தில் நெகிழ்ச்சி

துபாய் : துபாய் விமான நிலையத்தில் திடீரென மயக்கமடைந்தவருக்கு உதவிய நடிகர் சோனு சூட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.  பிரபல பாலிவுட் நடிகரும், சமூக சேவையில் தன்னை தீவிரமாக அர்ப்பணித்துக் கொள்பவருமான சோனு சூட், கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் சென்றிருந்தார். துபாய் விமான நிலையத்தின் குடியுரிமை அலுவலகத்தில் அவர் காத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் எவரும் மயக்கமடைந்தவருக்கு உதவ முன்வரவில்லை. அதிர்ச்சியுடன் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். சிலர் மொபைலில் அந்த நபரை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிதும் தாமதிக்காமல் கீழே விழுந்திருந்த நபரின் தலையை சோனு சூட் தூக்கி தன் மடியில் அமர்த்தினார். பிறகு அவரது முகத்தில் தண்ணீரை தெளித்தார். அந்த நபருக்கு சுயநினைவு திரும்பியது. உடனே, அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார் சோனு சூட்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் சோனு சூட்டை பாராட்டினர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர், மயக்கமடைந்த நபருக்கு முதலுதவி கொடுத்தனர். சுயநினைவுக்கு திரும்பிய அந்த நபர், சோனு சூட்டுக்கு நன்றி கூறினார். இதையறிந்த அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories: