ஒப்பில்லா தாயவள் கொப்புடை நாயகி

காரைக்குடி, சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  நகர் நடுவே கோயில் கொண்டு அருள்கிறாள். கொப்புடைய நாயகி.  கொப்புடை நாயகியை கொப்பாத்தாள் என்றும், கொப்புடை அம்மன் என்ற  நாமங்களிலும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். காரை மரங்கள் வளர்ந்திருந்த பகுதியை திருத்தி(அழித்து) மக்கள் குடியமர்ந்ததால் அப்பகுதி காரைக்குடி எனப்பெயர் பெற்றது. காரைக்குடியின்  தென்பகுதியில் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள செஞ்சை  ரங்கராபுரம் சிற்றூரில் கோயில்  கொண்டிருந்தாள் காட்டம்மன். காட்டில் அமர்ந்து இருந்ததாலே இந்த அம்மனுக்கு காட்டு அம்மன் என்ற நாமம் உருவானது. காட்டு அம்மனே மருவி காட்டம்மன் என்றானது.

அப்போது அப்பகுதியை ஆட்சி  புாிந்துவந்த சிற்றரசன், காட்டம்மன் மீது அளவில்லா பக்தி கொண்டிருந்தான். தினந்தோறும் அம்மனை வழிபட்ட பின்னரே தன்னுடைய அன்றாட பணிகளை செய்யத்துவங்குவான். தான் அன்றாடம் செய்யும் பணிகள் விபரம், அடுத்து செய்யப்போகும் பணிகள், பயணங்கள், திட்டங்கள், வரவு, செலவுகள் என எல்லாவற்றையும் மறைக்காமல் தனது மனசாட்சியாக தன்னையும், தனது மனதையும் ஆளும் அந்த காட்டம்மனிடமே ஒப்புவித்து வந்தான். காட்டம்மன் கோயில் உற்சவ விக்கிரகம் ஐம்பொன்னால் செய்யப்பட்டது.

அப்போது திடீரென முகலாயர் படையெடுப்பு நடந்தது. முகலாயர்களால் உற்சவ காட்டம்மனுக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்றெண்ணிய சிற்றரசன், செஞ்சை சங்கராபுரத்தில் இருந்த காட்டம்மன் கோயில் உற்சவ விக்கிரகத்தை, அன்றாட வழிபாடுகள் முடிந்த பிறகு, ஒரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த பெரிய பொந்தில் மறைத்து வைத்தான். காலங்கள் சில கடந்த நிலையில், மரப்பொந்தில்  இருந்தக்காட்டம்மனை மாடு மேய்க்கும் சிலர் கண்டெடுத்தனர், அதை ஒரு  மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். காரைக்குடி விரிவடைந்து வளர்ச்சியடைந்த பிறகு, அந்தச் சிலையை தற்போதுள்ள இடத்தில் நிறுவினர்.

இப்படி ஒப்படை செய்யப்பட்டதால் ஒப்படையாள் எனப் பெயர் பெற்றது. இதுவே நாளடைவில் மருவி  கொப்புடையாள் என்றானது. அம்மனின் நாமம் குறித்து இலக்கியவாதிகள் கூறுகையில், கொப்பு  என்பது பெண்கள் அணியும் காதணிகளில் ஒன்று. இந்த அம்மன் காதில் கொப்பை  அணிந்திருப்பதாலும் கொப்புடைய நாயகி என்று அழைக்கப்படுகிறாள் என விளக்கம் அளித்துள்ளனர். கொப்புடை நாயகி அம்மன் கோயில் காரைக்குடி நகரின் நடுவில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் மூன்று நிலைகளுடன் ராஜகோபுரங்கள் நிற்கிறது. இடதுபுறம் விநாயகர் சந்நதியும், கருப்பர் சந்நதியும் உள்ளது.

வலதுபுறம் முருகபெருமான் தண்டாயுத பானியாக அருள்புரிகிறார். கருவறையைச்  சுற்றியுள்ள பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, காசி  விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி,  சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி சந்நதிகள் கொண்டு அருள்கின்றனர். உள் பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் உவந்தருள் செய்கிறார். சுப்பிரமணியர் எதிரே பைரவர் சந்நதி. கருவறையில் ஒப்பில்லா  நாயகி கொப்புடை அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளாட்சி புரிகிறாள். கோயிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர், பனைமர சட்டங்களால்  உருவாக்கப்பட்டது. தேரானது கொப்புடைய அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, கண்மாய் வழியாக காட்டம்மன் கோயிலுக்குச் செல்லும். பின் அங்கிருந்து மீண்டும் கண்மாய் வழியே காரைக்குடிக்கு வந்து நிலை நிற்கும்.

படம்: வெங்கி

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: