விருத்தாசலம், மார்ச் 4: விருத்தாசலம் மற்றும் பெண்ணாடம் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் குறைந்த விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு சிலர் விற்பனை செய்து வருவதாக விருத்தாசலம் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தலைமை காவலர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் நேற்று கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணாடத்தில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி நோக்கி சந்தேகப்படும்படி வேகமாக சென்ற மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 25 மூட்டை (1.25 டன்) ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அரிசி மூட்டைகளுடன் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த சலீம் காதர் மகன் ஹிதாயத்துல்லா (32) என்பவரை கைது செய்து கடலூர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
