கரூர், மார்ச் 4: கரூரில் இருந்து தரகம்பட்டி செல்லும் சாலையோரம் ஆபத்தான வளைவு உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் இருந்து வெள்ளியணை, ஜெகதாபி வழியாக தரகம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
கிராமங்கள் சூழ்ந்த இந்த பகுதிச் சாலைகளில் அதிகளவு ஆபத்தான வளைவு பகுதிகள் உள்ளன. இதன் காரணமாக இரவு நேரங்களில் சிறு விபத்துக்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.
