நாமக்கல், மார்ச் 4: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று ரூ.86 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று சங்கத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு விவசாயிகள் 3,300 மூட்டை பருத்தியை கொண்டுவந்தனர். திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ரூ.8,169க்கும், மட்டரகம் பருத்தி குவிண்டால் ரூ.5,599க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக ரூ.86 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
