அரியலூர், மார்ச்.4: அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் 8வது நாளாக நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வருவாய் கிராம ஊழியர் முதல் வட்டாட்சியர் வரையிலான அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியமும், வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறைறயின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும் வெளிமுகமை, ஒப்பந்தம், தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும்.
அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு வட்டாட்சியர் ஆனந்தவேல் தலைமை வகித்தார். கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டன.
