அரியலூர், மார்ச்.4: இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தக் கோரி, அந்த திட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் 50க்கும் மேற்பட்டோர் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமியிடம் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 2022ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டு தற்போது மாலை நேர வகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1,000 அரசு வழங்கி வருகிறது. இதில் பணிபுரியும் நாங்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, உங்களுடன் ஸ்டாலின், ஆதார் முகாம், அன்புக்கரங்கள், காலனி அளவீடு, எஸ்சி எஸ்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலும் ஈடுபடுகிறோம். எனவே, இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். மேலும், எங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
