சென்னையில் இருந்து காரில் பின்தொடர்ந்து நகை கடை அதிபரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை: கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது

சித்தூர்: சென்னையில் இருந்து காரில் பின்தொடர்ந்து நகைகடை அதிபரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளையடித்த கவுன்சிலர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், கே.ஜி.எப் பகுதியை சேர்ந்தவர் சேதன் குமார். நகை கடை அதிபரான இவர் கடந்த 2ம் தேதி சென்னையில் இருந்து சுமார் ரூ.3.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ எடை கொண்ட 5 தங்க கட்டிகளை வாங்கிக்கொண்டு காரில் கே.ஜி.எப் நோக்கி புறப்பட்டார்.

இந்த கார் ஆந்திர மாநிலம் வி.கோட்டா மண்டலம், நாயகனேரி வனப்பகுதியில் இரவு வந்து கொண்டிருந்தபோது, அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த இறங்கிய மர்ம நபர்கள், சேதன் குமாரை மிரட்டி, தங்க கட்டிகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சேதன் குமார் கடந்த 3ம் தேதி வி.கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் பலமனேர் டிஎஸ்பி தேகலா பிரபாகர் தலைமையில் 4 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் கேஜிஎப் நகரத்தின் 4வது வார்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலரான ஜெயபால்(67) மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.5 கிலோ எடை கொண்ட 5 தங்க கட்டிகள்பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள மேலும் 9 பேரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post சென்னையில் இருந்து காரில் பின்தொடர்ந்து நகை கடை அதிபரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை: கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: