திண்டுக்கல் பிப். 11: திண்டுக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: 100 நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து மக்களை வஞ்சித்து வளர்ச்சியை தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் ஒன்றியம், நகரம் அளவில் ஒரு இடத்திலும் நாளை பிப்ரவரி 12ம் தேதி அன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுளள்ன. இதன்படி திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 18 இடங்களில் நாளை மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது.
