ஏரல், மார்ச் 23: சாயர்புரம் போப் கல்லூரியில் கல்லூரி ஆண்டுவிழா நடைபெற்றது. கல்லூரி செயலர் ஜெபர்சன் சாமுவேல்ராஜ் தலைமை வகித்து பேசினார். சாயர்புரம் சேகர குரு ஆனந்த் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து விழாவை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதவியல் துறைத் தலைவர் திலக லிலாவதி வரவேற்றார். கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் ஆண்டறிக்கை சமர்பித்தார். சிறப்பு அழைப்பாளராக பிரபு சிங் கலந்து கொண்டு மாணவர்கள் கல்வியுடன் வாழ்க்கை மேம்பாடுகளை அறிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விழாவில் கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் கணிதத் துறை முன்னாள் தலைவர் ஆலயமணி மற்றும் ஜெயக்குமார் சந்தோஷ், செல்வின், ஜோசுவா, ஜாக்சன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆங்கிலத் துறை தலைவர் செல்லராஜ் மனுநீதி நன்றி கூறினார். கல்லூரி சிற்றாலயத்தின் குரு எலிசபெத் நிறைவு ஜெபம் செய்தார்.
