ஸ்பிக்நகர், மார்ச் 23: தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை முத்தையாபுரம் அய்யன் கோவில் தெரு பகுதியில் சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை அய்யன் கோவில் பகுதியில் நேற்று மதியம் சாலையின் அருகே இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. தகவலறிந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் கிங்ஸிலி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் முறிந்து விழுந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். மரத்தை வெட்டி அப்புறப்படுத்த சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததால் போக்குவரத்து அதிகமுள்ள தூத்துக்குடி-திருச்செந்தூர சாலையில் சுமார் ஒரு மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது. மரம் முறிந்து விழுந்த போது அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
