முதுநிலை க்யூட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு: 2வது முறையாக நீட்டிப்பு

சென்னை: முதுநிலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 2வது முறையாக நீட்டித்து நாளை வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ)ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி 2026-27ம் ஆண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் வரும் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 14ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜனவரி 23) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஜனவரி 25ம் தேதி வரை செலுத்தலாம். எனவே, விருப்பமுள்ள பட்டதாரிகள் https://exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளம் வழியாகதுரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜனவரி 28 முதல் 30ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே முதுநிலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 2வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: