சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடி படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடி படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றி தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.
இன்றுவரை தமிழ்நாட்டை சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடி படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகத்தினருக்குக் கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்பு காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியினையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சம்பவங்கள், கடலோர பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பை ஆழமாக சீர்குலைத்துள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திட வேண்டும். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கவும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
