மும்பை: பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு, கடந்த பிப்ரவரி 13ம் தேதி முடக்கப்பட்டது. இதுகுறித்து புகார் கூறிய அவர், ‘எனது எக்ஸ் தள கணக்கை மீட்க, என்னால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அந்த கணக்கின் உள்ளே நுழைய முடியாததால், தளத்தில் இருந்து அந்த கணக்கை நீக்க முடியவில்லை. எனவே, அந்த கணக்கில் இருந்து வரும் எந்த இணைப்பையும், தகவல்களையும் தயவுசெய்து நம்ப வேண்டாம்.
கணக்கு மீட்கப்பட்டால், வேறொரு தளத்தில் அதுபற்றி தெரிவிப்பேன்’ என்று சொல்லியிருந்தார். இந்நிலையில், ஸ்ரேயா கோஷலின் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஸ்ரேயா கோஷல் கூறுகையில், ‘கடந்த பிப்ரவரி மாதம் ஹேக் செய்யப்பட்ட எனது எக்ஸ் தள கணக்கு, நீண்டதொரு போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது.
மிகவும் அபத்தமான தலைப்புகளுடன் கூடிய கட்டுரைகளும், ஏஐ மூலம் உருவாக்கிய படங்களுடன் கூடிய என்னை பற்றிய விசித்திரமான விளம்பரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் ரசிகர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும். அவை பல்வேறு மோசடி இணைப்புகளுக்கு வழிவகுக்கலாம். அந்த விளம்பரங்கள் குறித்து எக்ஸ் தள நிர்வாகத்துக்கு புகார் அளியுங்கள். அவற்றை நிறுத்த எனக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. என்னால் முடிந்தவரையில் முயற்சித்தேன். விரைவில் எக்ஸ் தளம் அந்த பிரச்னையை தீர்க்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.