புறநானூறு என்ற மாணவர்களின் புரட்சிப்படை, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக ரயிலை எரிக்கிறது. அப்போது காவல்துறை உயரதிகாரி ரவி மோகனுக்கும், போராளி சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் மோதலில் ஒரு மாணவர் பலியாகிறார். எனவே, போராட வேண்டாம் என்று முடிவு செய்யும் சிவகார்த்திகேயன், ரயிலில் நிலக்கரி அள்ளும் பணியில் ஈடுபடுகிறார்.
அந்த போராட்டத்தை விபத்து என்று சொல்ல வேண்டும், இனி மொழி பிரச்னை ஏற்படாது என்று பிரதமர் உறுதி அளிக்கிறார். பிறகு அவரது மகள் ஆட்சியில் தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிக்கப்படுகிறது. அன்றைய சென்னை மாநில முதலமைச்சர் அதற்கு ஆதரவாக செயல்படுகிறார். இந்தி தெரியாததால் சிவகார்த்திகேயனுக்கு வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தம்பி அதர்வா முரளியும், மாணவர்களும் திரண்டு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்துகின்றனர். அப்போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படும் சிவகார்த்திகேயன், மீண்டும் புறநானூறு படைக்கு தலைமை தாங்கி போராடுகிறார். இந்தியை திணிக்க தீவிரமாக முயற்சிக்கும் அரசை அவர்கள் என்ன செய்தார்கள் என்பது மீதி கதை.
1965களில் சென்னை மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய மாணவர்களின் எழுச்சியை சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறது படம். துணிச்சலான போராளியாகவும், பாசமுள்ள அண்ணனாகவும் செழியன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். அவரது 25வது படம் என்பதால், நடிப்பில் தனி முத்திரையை பதித்துள்ளார். தெலுங்கு பெண் ரத்னமாலாவாகவே வாழ்ந்துள்ள ஸ்ரீலீலா, கிளைமாக்ஸில் ரேடியோ மூலம் தகவல் சொல்லும் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார்.
சுறுசுறுப்பாக நடித்துள்ள அதர்வா முரளி, திடீரென்று கண்கலங்க வைக்கிறார். வில்லனாக தனி ராஜாங்கம் நடத்தும் ரவி மோகன், ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிப்பதே அவருக்கான வெகுமதி. மறைந்த சில அரசியல் தலைவர்களை நினைவூட்டும் கேரக்டர்களில் பிரகாஷ் பெலவாடி, சேத்தன், குரு சோமசுந்தரம், சந்தியா மிருதுள் ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர்.
மற்றும் காளி வெங்கட், குலப்புள்ளி லீலா, பிருத்வி பாண்டியராஜன் ஆகியோருடன் சிறப்பு வேடத்தில் தோன்றிய ராணா டகுபதி, பசில் ஜோசப் ஆகியோரும் இயல்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100வது படம் என்பதால் பாடல்களிலும் மற்றும் பின்னணி இசையிலும் அழுத்தமான முத்திரையை பதித்துள்ளார். ரவி கே.சந்திரன் கேமரா, 1965 காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தியுள்ளது.
சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகள், சதீஷ் சூர்யாவின் எடிட்டிங், பூர்ணிமா ராமசாமியின் காஸ்ட்யூம் டிசைன், எஸ்.அண்ணாதுரையின் அரங்க அமைப்பு படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. ‘எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி கிடையாது. இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம்’ என்ற கருத்தை சொன்ன இயக்குனர் சுதா கொங்கரா, சில காட்சிகளில் லாஜிக் மீறல்களை கவனித்திருக்கலாம். ஒரு மாநிலத்தின் உயிர்மூச்சே அதனுடைய தாய்மொழிதான் என்று அழுத்தமாக சொல்லி, தமிழ் மொழிக்கு சிம்மாசனம் போட்டிருக்கும் அவருக்கு பாராட்டுகள்.
