காஷ்மீரில் பாதுகாப்பாக இருக்கிறோம்: லியோ படக்குழு தகவல்

சென்னை: காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ‘பாதுகாப்பாக இருக்கிறோம்’ என ‘லியோ’ படக்குழு தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த் நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் மேனன், மிஷ்கின், கதிர், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில், லலித்குமார் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய்யுடன் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகி இருக்கும் சஞ்சய் தத், இதில் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.  இதனிடையே, நேற்று முன்தினம் டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘லியோ’ படக்குழு அங்கு தங்களின் தற்போதைய நிலை குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறது.  இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சந்திரமுகி படத்தில் பங்களாவிற்குள் செல்லும் வடிவேலு பயந்து நடுங்கும் வீடியோவை பகிர்ந்து ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று பதிவிட்டு இருக்கிறது. மேலும் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனத்தில் கவனம் செலுத்தும் ரத்னகுமார், ‘ப்ளடி நிலநடுக்கம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Related Stories: