பைரவரை பூஜியுங்கள் பயம் விலகும்!

?27 வயதாகும் என் மகள் எம்பிஏ முடித்துவிட்டாள். வேலைக்கும் போகவில்லை, வீட்டு வேலையும் செய்வதில்லை. வெளியே செல்வதற்கும் வெளி மனிதர்களுடன் பேசுவதற்கும் தயங்குகிறாள். எதனால் என்பதற்கான காரணம் தெரியாமல் தவிக்கிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. தகுந்த பரிகாரம் கூறுங்கள்.

- சுஜாதா, சென்னை.

அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன் என்பதாலும் தற்போது புதன் புக்தி நடந்து வருவதாலும் திருமண யோகம் என்பது துவங்கிவிட்டது. அவருடைய ஜாதகத் தில் உத்யோகத்தைக் குறிக்கும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியும் புதனே ஆவார். அத்துடன் பத்தாம் வீட்டில் சூரியன் மற்றும் குருவின் இணை உயர்ந்த உத்யோகத்தை உண்டாக்கித் தரும். ஜாதக பலம் என்பது நன்றாகவே உள்ளது. ஜாதகத்தில் பலமான நிலை இருந்தும் மகள் வேலைக்கு செல்வதில்லை என்றும் வெளியாட்களுடன் பேசுவதற்குத் தயங்குகிறாள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இது அவருடைய இயற்கையான குணம் போல் தெரியவில்லை. அதுபோன்ற குணமுடையவர்களால் எம்பிஏ வரை படிக்கவும் இயலாது. ஜாதகத்திற்கும் அப்பாற்பட்டு வேறு பிரச்னைகள் இருக்கலாம். தாயாராகிய உங்களால் அதனை கண்டுபிடிக்க இயலும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் அருகிலுள்ள அம்மனின் ஆலயத்தில் இருந்து எலுமிச்சம்பழத்தினை பிரசாதமாக வாங்கி வந்து அதனை சாறுபிழிந்து உப்பு, சர்க்கரை ஏதுமின்றி தண்ணீர் மட்டும் கலந்து உங்கள் மகளை குடிக்கச் செய்யுங்கள். தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு விடாமல் செய்யுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அவர் மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கி வேலைக்குச் செல்லத் துவங்குவார். வேலை கிடைத்தவுடன் திருமணத்தையும் கையோடு நடத்திவிட முடியும். அவரது ஜாதக பலத்தின்படி 02.12.2021-ற்குள் திருமணம் நிச்சயமாகிவிடும்.

?நாங்கள் குடியிருக்கும் வீடு மிகவும் பழமையானது. வடக்கு பார்த்த வாயிலைக் கொண்டது. வீட்டை மாற்ற எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இந்த வீட்டில் மின்சார பிரச்னை முக்கியமாக உள்ளது. கடந்த ஒரு வருட காலமாக ஏ.சி., வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ், டிவி என எல்லாவற்றையும் சரி பார்க்க நேர்ந்தது. தற்போது மீண்டும் முதலில் இருந்து பிரச்னை துவங்கியுள்ளது. நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.

- அருணா, புதுச்சேரி.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வடக்கு பார்த்த வாயில் உள்ள வீட்டினால் எந்த பிரச்னையும் இல்லை. என்றாலும் உங்கள் ஜாதகத்தில் குரு 12ல் மறைவதாலும் அவர் வக்கிரம் பெற்றுள்ளதாலும் சிறு சிறு பிரச்னைகள் உள்ளது. உங்கள் ஜாதக பலத்தின்படி நான்காம் பாவக அதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் செவ்வாயுடன் இணைந்து 11ல் அமர்ந்துள்ளதால் சொந்தமாக வீடு வாங்கினாலும் அது பழைய வீடாகத்தான் அமையும். அதில் எந்த விதமான தவறும் இல்லை. தற்போது இருந்து வரும் பிரச்னை 12.12.2020 முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கும். 2024ம் ஆண்டின் துவக்கத்திலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் சிறப்பாக உள்ளது. தற்போதைய சூழலில் நீங்கள் வீட்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இன்னும் மூன்று ஆண்டு காலம் இங்கேயே வசிக்கும் சூழலே உள்ளது. முடிந்தால் மின்சார ஒயர், ஸ்விட்ச் பாக்ஸ் முதலியவற்றை மாற்றிக்கொள்ள முயற்சியுங்கள். வீட்டினில் நாய் ஒன்றினை வளர்ப்பது நல்லது. அதற்கான சாத்தியக்கூறு இல்லாவிடில் தினமும் உங்கள் வீட்டு வாசலில் உள்ள நாய் ஒன்றிற்கு உணவளித்து வாருங்கள். அஷ்டமி நாட்களில் பைரவருக்கு பூஜை செய்து வழிபடுவதும் ஸ்தான பலத்தினைத் தரும். பைரவரை பூஜித்து வர குடியிருக்கும் வீட்டினில் எந்த தோஷம் இருந்தாலும் நீங்கிவிடும். கவலை வேண்டாம்.

?எம்.ஏ., பட்டதாரியாகிய எனக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. கிடைக்கும் வேலையும் ஆறு மாதத்திற்கு மேல் நிலைப்பதில்லை. நிலையான வேலை இல்லாததால் 35 வயதாகும் எனக்கு திருமணமும் தடைப்பட்டுக்கொண்டே செல்கிறது. என் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டுங்கள்.

- இளங்கோவன், கோவை.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதிபதி புதன் 12ல் அமர்ந்திருப்பதால் எதிலும் ஒரு ஸ்திரத்தன்மை என்பது அமையாமல் சிரமப்பட்டு வருகிறீர்கள். மேலும் தொழில் ஸ்தானத்திற்கும் திருமண வாழ்வினைக் குறிக்கும் களத்ர ஸ்தானத்திற்கு அதிபதியும் ஆகிய குரு வக்கிர கதியில் அமர்ந்திருப்பது உங்களை ஒரே இடத்தில் தொடர்ந்து பணி செய்யவிடாமல் அவதியைத் தருவதோடு தாமதமான திருமண அமைப்பையும் உண்டாக்கியுள்ளது. மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். எல்லோரையும் போல் ஒரே நேர்க்கோட்டில் எண்ணாமல் சற்றே மாற்றி யோசித்தீர்களேயானால் மாற்றம் நிச்சயம் உண்டாகும். லக்னத்தில் இருக்கும் ராகு உங்கள் முன்னேற்றத்திற்குத் துணை புரிவார். அடுத்தவர்களிடம் சென்று பணி புரிவதைவிட சொந்தமாக தொழில் செய்வதே நல்லது. கன்சல்டன்சி அலுவலகம் ஒன்றைத் துவக்குங்கள். அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தொழில் உங்களுக்கு கைகொடுக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த பெண் ஒருவர் வாழ்க்கைத்துணைவியாக அமைவார். விரைவில் தொழில் அமைந்து அதனைத் தொடர்ந்து உடனுக்குடன் திருமணமும் நடந்துவிடும். திருமணத்திற்கு பின் தொழில் மேலும் முன்னேற்றம் அடையும். எதிர்காலம் நன்றாக உள்ளது. ஏதேனும் ஒரு புதன்கிழமையில் பேரூர் பட்டீஸ்வரரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

“மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்

  பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

  நாப்பிணை தழுவிய நமச்சிவாயப்பத்(து)

  ஏத்தவல்லார் தமக்கிடுக்கண் இல்லையே”.

மேற்காணும் துதியை தினந்தோறும் சொல்லி எம்பெருமானை வழிபட்டு வர விரைவில் உங்கள் பிரச்னை தீரும்.

?எனக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீர்ப்பையில் பிரச்னை உள்ளது. உறங்கும்போது என்னையும் அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறேன். பல்வேறு மருத்துவம் பார்த்தும் பலனில்லை. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- சுப்ரமணியன், மயிலாடுதுறை.

உங்கள் ஜாதகத்தில் ஆறாம் பாவகத்தில் சந்திரனும், சனியும் இணைந்து அமர்ந்திருப்பதால் இந்த பிரச்னை உருவாகியிருக்கிறது. மேலும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசை நடைபெற்று வருகிறது. இது எளிதில் தீர்வடையக் கூடிய பிரச்னையாகவே தெரிகிறது. தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு குவளை நீராகாரமும், இரண்டு சிறிய வெங்காயமும் சாப்பிட்டு வாருங்கள். நாள்பட்ட நீராகாரம் கூடாது. முதல் நாள் இரவில் சாதத்தில் உப்பு இல்லாமல் வெறும் தண்ணீரை ஊற்றி வையுங்கள். மறுநாள் காலையில் சாதத்தை வடிகட்டி வெறும் நீரை மட்டும் பருகுங்கள். சிறிய வெங்காயத்தை நன்றாக கடித்துச் சாப்பிடுவது நல்லது. சிறுகீரை கடைசல், வாழைத்தண்டு போன்றவற்றை உணவினில் சேர்த்துக் கொள்வதும் நன்மை தரும். பகல் நேரத்தில் சிறுநீரை அடக்கி வைக்காதீர்கள். கொஞ்சம், கொஞ்சமாக மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். கேது தசை முடிந்து சுக்கிர தசை துவங்கும்போது சுகமான வாழ்வு உங்களுக்காகக் காத்திருக்கிறது. திங்கள் மற்றும் சனிக்கிழமை நாட்களில் அருகில் உள்ள துர்கையம்மனின் ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவதோடு தினசரி இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வருவதால் உங்கள் பிரச்னை கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரக் காண்பீர்கள்.

‘‘மாலினி நீயே மாதினி நீயே

 மாதவி நீயே மான்விழியே

 ரோக நிவாரணி சோக நிவாரணி

 தாபநிவாரணி ஜெயதுர்கா.’’

Related Stories: