திருமணி முத்தாற்றின் கரையில் பஞ்சபாண்டவர்கள் வணங்கிய பில்லூர் ஸ்ரீவீரட்டீஸ்வரர் கோயில்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது அருள்மிகு  ஸ்ரீவீரட்டீஸ்வரர் திருக்கோயில். சிவலிங்க உருவில் ஸ்ரீ வீரட்டிஸ்வரரும், வேதநாயகியாக அம்பாளும்   பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். திருமணி முத்தாறு ஆற்றங்கரையின் மேற்குகரையில் ஸ்ரீ வீரட்டீஸ்வரர்  திருக்கோவில் அமைந்துள்ளது.பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த பஞ்சத்தை போக்க என்ன வழி என்று அரச குருவிடம் கேட்டனர். அப்போது அசரீரி வழியாக பதில் வந்தது. ‘‘பாண்டவர்கள் அனைவரும் வடதிசை நோக்கி செல்ல வேண்டும். அங்கு ஒரு வனத்தில் புருஷாமிருகம் உள்ளது. சிவன் அருள் பெற்ற புருஷாமிருகத்தை நாட்டுக்குள் பிடித்து வந்தால் பசி, பஞ்சம், பட்டினி தீரும்’’ என்று அந்த அசரீரி ஒலித்தது.

இதன் படி திருமணி முத்தாறு வனப்பகுதியில் தம்மை பிடிக்க வந்த பஞ்ச பாண்டவர்களை கண்டதும், புருஷாமிருகம் கடுமையாக தாக்கியது. அனைவரும் பயத்தில் சிதறி ஓடினர். அப்போது தருமன், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை வழிபட்டான். லிங்கத்தை கண்டதும் மிருகம் சுற்றி சுற்றி வந்தது. இதையடுத்து பாண்டவர்கள் 5 பேரும் திருமணி முத்தாற்றின் கரையில் 5லிங்கங்களை பிரதிஷ்டை ெசய்தனர். இப்படி அர்ஜூணனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு லிங்கத்தை மூலவராக வைத்து பில்லூரில் உருவானது தான் ‘‘ஸ்ரீவீரட்டீஸ்வரர் கோயில்’’ என்பது தலவரலாறு.

சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று ‘மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்’ என்கிறது. திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய 5திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை. இந்த 5கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்திபெறுவார்கள் என்பது ஐதீகம்.

எல்லா சிவாலயங்கள் போல தோற்றத்தில் இருப்பினும், வீரட்டீஸ்வரர் கோயில் பல்வேறு  சிறப்புகளை பெற்றுள்ளது. தொல்பொருள் ஆய்வுகளில் இது உறுதி  செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆய்வு செய்த ேபாது கிடைத்த விநாயகர்  சிலையில் பில்லூர் என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் பழங்காலத்தில் ‘‘புல்லார்’’   எனக்குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை வரிக்கல்லால்  ஆன கோபுரத்தை அக்காலத்தில் உருவாக்கியிருப்பது வியப்பான ஒன்று.ஸ்ரீ வீரட்டீஸ்வரர் திருக்கோவில் கல்வெட்டு பல்லவர்கால மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். நாமக்கல் குடவரைக்கோவில் பல்லவர்கால மகேந்திரவர்மன் காலத்திய கல்வெட்டாகும். நாமகிரியின் அடையாளச்சின்னம் இத்திருக்கோவிலில் காணப்படுவதால் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் திருக்கோவிலும் பல்லவர்காலத்தில் மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது புலனாகிறது. திருக்கோவிலில் கல்லால் ஆன கலசம் இந்தக்கூற்றை மேலும் உண்மையாக்குகிறது.

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பிரதோஷம், அன்னாபிஷேகம் என்று அனைத்து விழாக்களும் இங்கு களை கட்டும். எப்படிப்பட்ட துன்பத்தையும் வீரத்துடன் எதிர்கொண்டு, விரட்டியடிக்கும் சக்தி தருபவரே வீரட்டீஸ்வரர். அவரை வழிபட்டால் எந்த துயரமும் நம்மை நெருங்காது என்பது ெதாடர்ந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை. திருமணத்தடை நீங்கவும், குழந்ைத வரம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள், வீரட்டீஸ்வரரை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றியும், நெய்விளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Related Stories: