“உங்களில் ஒருவர், மற்றவரைப்பற்றி புறம் பேச வேண்டாம்” (திருக்குர்ஆன் 49:12) திருமறை மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தீய நடைமுறைகளில் ஒன்று இந்தப் புறம் பேசுதல். ஆனால் இந்தப் புறம் பேசுதல் இன்று, இல்லாத இடம் எங்கேனும் இருக்கிறதா? அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், வணிக நிறுவனங்களில் என எங்கும் இருக்கும் ஒரு சமூகத் தீமைதான் புறம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “புறம் பேசுதல் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்கள். தோழர்கள், “இறைவனும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினார்கள். இறைத்தூதர் அவர்கள், “ஒருவர் தம் சகோதரர் பற்றி அவர் விரும்பாதவற்றைப் பேசுவதாகும்” என்று கூறினார்.
உடனே தோழர்கள்,“அந்த விஷயம் அவரிடம் இருந்தாலுமா?” என்று திருப்பிக்கேட்க, நபிகளார், “அவரிடம் இருக்கும் விஷயத்தைப் பேசுவதுதான் புறம். அவரிடம் இல்லாத செய்தியைக் குறித்து நீ பேசினால் அது அவதூறு” என்றார்கள் நபிகளார். தன் உருவம், தன் குணம், தன் நடத்தை, தன் குடும்பம் பற்றியெல்லாம் மற்றவர்கள் குறைகூறிப் பேசும்போது அதை மனிதன் வெறுக்கவே செய்கிறான். அடுத்தவரை இழிவுபடுத்த வேண்டும், அவருக்கு இருக்கும் நற்பெயரைத் தகர்க்க வேண்டும் எனும் ஆசையின் வெளிப்பாடுதான் புறம். சக மனிதனின் மானம் மரியாதையைக் கிழித்து உண்பதற்கு இணையானது இந்தப் புறம் பேசும் வெறி. சரியாகச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு மனநோய்.