எனது படங்களை தொடர்ந்து பாராட்டும் ரஜினிகாந்த்: கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி

சென்னை: ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த படம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், நவீன் சந்திரா, சட்டானி விது, இளவரசு, தேனி முருகன் நடித்திருந்தனர். கடந்த 10ம் தேதி வெளியான இப்படம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், ‘இப்படத்தின் தலைப்பை வழங்கிய பைவ் ஸ்டார் கதிரேசனுக்கு நன்றி. இப்படத்துக்கு கடவுளின் ஆசீர்வாதம் நிறைய இருந்ததால், படப்பிடிப்பில் பல விஷயங்கள் பாசிட்டிவ்வாக நடந்தது. படத்தின் காட்சிகளை நாங்கள் செதுக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் தானாகவே அமைந்தது.

படத்துக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், ஷங்கர், நெல்சன் திலீப்குமார், மாரி செல்வராஜ் உள்பட அனைவருக்கும் நன்றி. ரஜினிகாந்த் என்னையும், எங்கள் குழுவினரையும் பாராட்டினார். ‘பீட்சா’, ‘மெர்க்குரி’ ஆகிய எனது படங்களைப் பாராட்டிய ஒரே நபர் அவர் மட்டும்தான். அவருக்கு எங்கள் நன்றி’ என்று சொல்லி நெகிழ்ந்தார். ராகவா லாரன்ஸ் பேசும்போது, ‘எனது ரசிகர்களை நேரில் சந்திக்க, இனிமேல் நானே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்கிறேன். ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் எனக்கு கிடைத்த சம்பளத்தில், சென்னையில் எனது தாயார் கண்மணி பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டுகிறேன். அதில் எனது ரசிகர்கள் தங்கள் திருமணத்தை இலவசமாக நடத்திக்கொள்ளலாம். மண்டப வாடகை தவிர இதர கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும்’ என்றார். தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, நவீன் சந்திரா, சட்டானி விது உள்பட பலர் பேசினர்.

The post எனது படங்களை தொடர்ந்து பாராட்டும் ரஜினிகாந்த்: கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: