வேலூர், மார்ச் 27: வேலூர் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா(30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 24ம் தேதி மாலை 5.30 மணியளவில் ஆற்காட்டில் இருந்து வேலூரை நோக்கி மொபட்டில் செல்போனில் பேசியபடி வந்துள்ளார். அப்போது பெருமுகை பகுதியில் வரும்போது பைக்கில் பின்தொடர்ந்து 3 பேர் திடீரென செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் அன்று மாலையே வேலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரோகினி (34).
இவர் அலுமேல்மங்காபுரம் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தபோது அவர் கொண்டு சென்ற கைபையை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரு சம்பவங்கள் ஒரே கும்பல் மேற்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரே பைக்கில் வந்து 3 வாலிபர்கள் செல்போன், கைபை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வேலூர் சேண்பாக்கம் பகுகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற குல்லா(25) என்பரை கைது செய்தனர். அவரிடமிருந்து கைபை மற்றும் ₹500 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் செல்போன் பறிப்பு ஒருவர் கைது appeared first on Dinakaran.