கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கே.ஏ.நகர் தர்கா பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நாகசாமி (53). இவர் தற்போது ஜோதிடம் மற்றும் குறி சொல்லும் தொழில் செய்து வருவதுடன், வீட்டின் அருகே 12 அறைகளை கட்டி, வெளியூரிலிருந்து வேலை மற்றும் தொழில் நிமித்தமாக வருபவர்களுக்கு வாடகைக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் கோவையை சேர்ந்த சுமையா, நவீனா(எ)ஆயிஷா மற்றும் பாத்திமா(எ)நிலா ஆகிய 3 பெண்கள், வாடகைக்கு வந்து குடியிருந்தனர். கடந்த 12ம் தேதி மதியம் 3 மணியளவில், சிலர் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தங்கியிருந்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர்களை மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறித்துச் சென்றனர்.
இது குறித்து நாகசாமி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், கே.ஏ.நகர் இர்ஷாத்(எ)முகமது இர்ஷாத்(20), தர்கா அர்பாஸ்(29), கீழ்புதூர் அம்ஷாத்(29), கோட்டை பாசில்(எ)சையத் பாசில்(27), லண்டன்பேட்டை அன்னு(எ)நூர்முகமது (28) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70,500 ரொக்கம், 6 பவுன் நகைகள், ஒரு வெள்ளிக்காப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய சேது(எ)அசால்ட் சேது, திருமலை உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
