திருவண்ணாமலையில் நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம்: பாதிக்கப்பட்ட இளம்பெண்களையே குற்றவாளிகளாக்கிய போலீஸ் அதிகாரிகள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தில், பாதிக்கப்பட்ட இளம்பெண்களிடம் புகார் பெறாமல், குற்றவாளிகளை போல் குறுக்கு விசாரணை நடத்தி அலைக்கழித்ததாக துறை சார்ந்த விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு கிரிவலம் சென்ற தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான 30 வயது இளம்பெண் மற்றும் 31ம் தேதி இரவு கிரிவலம் சென்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஆகியோரை மிரட்டி நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து பணம் மற்றும் நகை பறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக, ஒரு சிறுவன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதோடு, தலைமறைவாக உள்ள மேலும் ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் செல்போன்களில், 25க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் பதிவாகியிருந்தது அதிர்ச்சியடைய செய்தது. அவர்கள் கிரிவலம் சென்றபோது பின்தொடர்ந்து ஆபாச வீடியோ எடுத்ததோடு, சுமார் 3 மணி நேரம் நிர்வாணமாக அமர வைத்து மிரட்டி பணம், நகை பறித்தது தெரியவந்தது. ஆனாலும், பாதிக்கப்பட்ட பெண்களின் நலன் கருதி, விசாரணை விவரங்களை வெளியிடாமல் தொடர் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உளவுத்துறை சார்பில் துறை சார்ந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ெபாதிக்கப்பட்டு புகார் அளிக்க வந்த 2 பெண்களிடம் இருந்தும் புகாரை வாங்காமல், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் அலைக்கழித்தது தெரியவந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகள் போல குறுக்கு விசாரணை நடத்தியதும், நடந்த சம்பவம் உண்மையா? அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? என பல்வேறு கேள்விகளை கேட்டு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற மறுத்ததோடு, நகை மட்டும் அபகரித்ததாக புகார் எழுதித்தருமாறு கட்டாயப்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ தொடர்புகொண்டு புகார் செய்த பிறகே, வழக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டிய, தனிப்பிரிவு போலீசாரும் கடமையில் இருந்து தவறியதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: