சென்னை: கட்டுமானம் நடைபெறும் வீட்டிற்குள் புகுந்து மேஸ்திரியின் செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (51). இவர் அசோக் நகர் 12வது அவென்யூவில் உள்ள கட்டுமானம் நடைபெறும் வீட்டில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 12ம் தேதி வேலை முடிந்து புதிய வீட்டிலேயே தூங்கியுள்ளார். 13ம் தேதி அதிகாலை கட்டுமான பணி நடந்த வீட்டில் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது, ஒருவர் மேஸ்திரியின் செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து மேஸ்திரி சரவணன் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, பழைய திருட்டு வழக்கில் தொடர்புடைய ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த தியாகு (41) என்று தெரியவந்தது. உடனே போலீசார் தியாகுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
