சீர்காழி, ஏப்.10: சீர்காழி அருகே பறக்கும்படை வாகன சோதனையில் ரூ.1,55,000 பறிமுதல் செய்யப்பட்டு தலைமையிடத்து தனி தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சீர்காழி வட்டம், கதிராமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் நிலையான கண்காணிப்பு குழு, இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் தலைமை காவலர் முத்து பாலகிருஷ்ணன் கொண்ட குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சீர்காழி, ஆனைக்காரன் சத்திரம், பூசைநகர் பரத் தேவசி, த/பெ. துக்காராம் என்பவரின் இரு சக்கர வாகனத்தினை ஆய்வு செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,55,000ஐ கைப்பற்றினர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து தனி தாசில்தார் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
