திருவாடானை, ஏப்.14: துரித உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்ற ‘இன்ஸ்டன்ட்’ உணவு முறையால் சர்க்கரை, ஊட்டச்சத்துக் குறையாடு போன்ற நோய் பாதிப்புகள் தற்போது மக்களை அதிகம் தாக்குகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு நாள் உணவிலும் சிறுதானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொரு சத்துக்களை கொண்டிருக்கும் உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். சத்துகள் சரிவிகித அளவில் உணவில் இருந்தாலே, எவ்வித நோய்களும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம். பாரம்பரிய உணவு முறை மாறியதால் தற்போது பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதனால், அவர்கள் இரும்புச்சத்து உள்ள உணவை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளின் 3 வேளை உணவில் ஒரு முறையாவது சிறுதானிய உணவுகளை சேர்க்க வேண்டும். கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி, திணை, சோளம் போன்ற சிறுதானிய உணவுகளில் நிறைய பலன்கள் உள்ளன. அரிசி, கோதுமையை விட பன்மடங்கு ஊட்டச்சத்துகள் இவற்றில் உள்ளது. எல்லா காலக்கட்டத்திலும், அனைத்து வயதினருக்கும் சிறந்த உணவு சிறுதானியங்கள் தான்.
