குளித்தலை, ஏப். 14: தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 85 வயதுமுதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் வாக்கு செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் மார்ச 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் வேட்பு மனு இறுதி நாளாகும். ஏப்ரல் 9ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திமுக அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு வார காலமே உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 85 வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் நேரடியாக அதற்கான நியமிக்கப்பட்ட அலுவலர்கள் காவலர்கள் வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் குழுவாக சென்று அவர்களுக்கு உரிய விண்ணப்பத்தை வழங்கி அதற்குரிய வாக்கு சீட்டு வாக்காளரிடம் வழங்கப்பட்டு மறைமுக வாக்களித்த பின் மீண்டும் அந்த வாக்கு சீட்டை அலுவலர்கள் கொண்டு வந்த வாக்கு பெட்டியில் போட்டு பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். இது போன்று குளித்தலை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களை தேர்ந்தெடுத்து பல்வேறு குழுக்களாக நகர்ப்புறம் கிராமப்புறங்களுக்கு சென்று வாக்குசெலுத்தும் பணியினை தொடங்கினர்.
