கோவையில் இந்திய குடியரசு கட்சியின் (ஆர்பிஐ-ஏ) தலைவரும், ஒன்றிய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர், என்டிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் தவெக தலைவர் விஜய் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்கிறார். தற்போது அவரோடு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒருவேளை விஜய் அதிக இடங்களை கைப்பற்றினால், ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டால் அவரை நாடுவோம்.
விஜய் அதிக வாக்குகளை பெறுவார் என்பதால் அவர் திமுகவுக்கு பெரிய சவாலாக இருப்பார். எங்களது இலக்கு தனிப்பெரும்பான்மை என்றாலும் கூட்டணியை வலுப்படுத்த விஜய்யை வரவேற்போம். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா டாக்டர் அம்பேத்கரின் இந்து வாரிசுரிமை சட்ட கனவை நனவாக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை.
வரும் காலங்களில் தொகுதி மறுவரையறைக்கு பிறகு மக்களவையின் மொத்த இடங்கள் 816 ஆக உயரக்கூடும். அதில் பெண்கள் 273 இடங்களில் அமர்ந்து சாதனை படைப்பார்கள். இந்த இடஒதுக்கீடு 2029 நாடாளுமன்ற தேர்தலிலும், அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
கூட்டணியில் 18 இடங்களில் இந்தியக் குடியரசுக் கட்சி ‘நட்பு ரீதியான’ போட்டியில் ஈடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதிமுக, பாஜவை விமர்சிக்காமல் பேசி வரும் விஜய், அவர்களின் பி டீம் என்று சொல்லப்படுகிறது. தற்போது, ஒன்றிய அமைச்சர் விஜய்யிடம் ஆதரவு கேட்போம் என கூறி வருவது பூனை குட்டி கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கின்றனர்.
