கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பா.ஜ அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித் சார்பில், ‘மாணவர்களின் குரல்; மாற்றத்திற்கான குரல்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் இரவு காந்தி சிலை அருகே பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைப்பினர் பேசியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு வந்த வி.சி. கட்சியை சேர்ந்த சிலர் கூட்டத்தை நிறுத்த கோரி, நாற்காலியை தூக்கி மேடையில் வீசியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அங்கு இருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் காந்தி சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட சொல்லி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.
