வீரவநல்லூர், மார்ச் 27: சேரன்மகாதேவி பஸ் நிலையம் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று பேருந்து நிலைய வளாகத்தில் கட்டுமான பணிகள் செய்வதற்கு ஏதுவாக பேருந்துகள் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் கடைகளை காலி செய்வதற்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும் எனவும், அதுவரை கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் வியாபாரிகள் வலியுறுத்தினர். இதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் நேற்று மாலை பேருந்து நிலைய வியாபாரிகள் பேருந்து நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் திடீரென நடந்த இந்த தர்ணா போராட்டம் குறித்து அறிந்த டிஎஸ்பி அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
