இடைப்பாடி, மார்ச் 27: இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,42,500 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இடைப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் மூலப்பாதை சாலையில், தொகுதி நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.1,42,500 ரொக்கப்பணம் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பணத்தை கைப்பற்றி இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.
