கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க கூடாது தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது

வேலூர், மார்ச் 27:
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் கோயில் கும்பாபிேஷகங்கள் நடத்த தடையாக இருக்காது என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிவிப்பு தொடங்கிய அந்த நிமிடம் முதல் ேதர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதிய திட்டங்கள் தொடக்க விழா, அரசு கட்டிட திறப்பு விழாக்கள் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுமா என்ற ேகள்வி எழுந்தது. இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் தர் தமிழக அரசின் கூடுதல் செயலாளர் மணிவாசனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின்படி, கோயில்களில் கும்பாபிஷேகம் தொடர்பான சடங்குகளை நடத்த தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி தேவையில்லை. அதேநேரத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்வதை தவிர்ப்பதுடன், அவர்கள் பங்கேற்கும் வகையிலான முறையான விழாக்கள் ஏதும் நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: