திருவண்ணாமலை, மார்ச் 27: திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் நடத்திய சோதனையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை நடந்த சோதனையில், ஆரணி தொகுதியில் ரூ.32.95 லட்சம், செங்கம் தொகுதியில் ரூ.15 லட்சம், செய்யாறு தொகுதியில் ரூ.4.71 லட்சம், கலசபாக்கம் தொகுதியில் ரூ2.59 லட்சம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.9.54 லட்சம், போளூர் தொகுதியில் ரூ.4.97 லட்சம், திருவண்ணாமலை தொகுதியில் ரூ.17.95 லட்சம், வந்தவாசி தொகுதியில் ரூ.15.97 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் என மொத்தம் ரூ.90.18 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணமும், இதர வகை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
