ரூ.30.31 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன மேலாளர் கைது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை காட்பாடி அருகே

வேலூர், மார்ச் 27: காட்பாடி அருகே ரூ.30.31 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்க்காடு கூட்ரோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (32). இவர் திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் வேளாண் பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலூர் மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2023- 24ம் ஆண்டில் மேலாளராக இருந்தபோது நிறுவனத்திற்கு பணம் கட்டி ஆர்டர் கொடுத்த உரக் கடைகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் சப்ளை செய்யவில்லையாம். இதுகுறித்து உரக் கடைக்காரர்கள் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஆர்டர் செய்த உரங்கள் மற்றும் பூச்சிமருந்துகளை அனுப்பி வைத்துவிட்டோம் என கூறியுள்ளனர். ஆனால் உரக்கடைக்காரர்கள் தங்களுக்கு பொருட்கள் வந்து சேரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து உர நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, மேலாளர் மோகன்ராஜ் தனது நிறுவனத்தில் இருந்து வந்த பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களை ஆர்டர் செய்த உரக்கடைக்களுக்கு கொடுக்காமல், அதை வேறு உரக்கடைகளுக்கு விற்பனை செய்து அதன் மூலம் 30 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நிறுவனத்தின் திருச்சி மண்டல மூத்த மேலாளர் சுந்தரம் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி அனுமந்த் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: