வேலூர், மார்ச் 27: தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி வேலூரில் நேற்று நடந்த கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு பேரணிகள், மனிதச்சங்கிலி, ராட்சத பலூன்களை பறக்கவிடுதல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரங்கோலி கோலங்கள் வரைதல், வீடு, வீடாகச் சென்று மேளதாளங்களுடன் ‘தேர்தல் திருவிழா’ அழைப்பிதழ்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது. வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, கிரீன் சர்க்கிள் சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், வியைாட்டு விடுதி மாணவர்கள் என 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன்(பொது), தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜன், தாசில்தார்கள் சச்சிதானந்தம், ரமேஷ் (தேர்தல்), பழனி (வேலூர்) உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
