கறம்பக்குடி, ஜன.30: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சியில் சமத்துவபுரம் அமைந்துள்ளது. இந்த சமத்துவபுரத்தில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக சமத்துவபுரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக தகவல் அறிந்து அங்கு சென்ற வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் பிரச்னை இரண்டு நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக கறம்பக்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
