புதுக்கோட்டை, ஜன. 28: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை அதிமுக உறுப்பினராக இருப்பவர் விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில், வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 27ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
