சாத்தான்குளம், நவ. 6: சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து ஒரு கால்வாயில் புத்தன்தருவை குளத்துக்கும், மற்றொரு கால்வாய் மூலம் கல்லானேரிகுளம்,புல்லானேரிகுளம்,உடன்குடி தாங்கைகுளம் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றது. இதற்கிடையே உடன்குடி விவசாயிகள் தங்களது பகுதிக்கு வரும் தண்ணீரை, அடைத்து வைத்து புத்தன்தருவைக்கு தண்ணீர் விடுவதாக புகார் தெரிவித்தததால் புத்தன்தருவை செல்லும் மதகுகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து சாத்தான்குளம் பகுதி வறண்டதால் சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள நிலத்தடி உவர்ப்பாக மாறியது.எனவே சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து புத்தன்தருவை குளத்து கால்வாயில் அடைக்கப்பட்ட ஷட்டரை திறந்து விடக்கோரி, சாத்தான்குளம் மாவட்ட பாஜ துணைத் தலைவர் செல்வராஜ், மற்றும் புத்தன்தருவை, வைரவம்தருவை, சுண்டங்கோட்டை, படுக்கப்பத்து , நடுவக்குறிச்சி விவசாயிகள் சாத்தான்குளத்தில் மறியல் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் வட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் வைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் வினோத்குமார், சுப்பையா, சாத்தான்குளம் எஸ்ஐபாலகிருஷ்ணன், மாவட்ட பாஜ துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட பாஜ பிரசார பிரிவு தலைவர் மகேஸ்வரன், சாத்தான்குளம் நகரத் தலைவர் ராம்மோகன், சாஸ்தாவிநல்லூர் குடிநீர் அபிவிருத்தி மையம் மற்றும் விவசாய சங்கத் தலைவர் எட்வின்காமராஜ், செயலாளர் லூர்துமணி, செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், அருள்ராஜ் உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.