தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்

தூத்துக்குடி, ஏப். 25: கோடை காலத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் அமைக்க திமுகவினருக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதையடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர், நீர்மோர், குளிர்பானங்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், வைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றில் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும். இதற்கு கட்சியின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை அமைப்புகளும், சார்பு அணிகளும் இணைந்து செய்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: