கோவில்பட்டியில் ஆர்வமுடன் வாக்களித்த இளம் வாக்காளர்கள்

கோவில்பட்டி, ஏப்.20: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான மக்களவைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில் பொதுமக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். கோவில்பட்டி காந்திநகரில் உள்ள நகராட்சி பள்ளியில் நகராட்சி சேர்மன் கருணாநிதி தனது வாக்கினை பதிவு செய்தார். இழுப்பையூரணி பார்வதி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் முதன்முறை வாக்குரிமை பெற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதுகுறித்து இளம் வாக்காளர்கள் கூறுகையில், ‘கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் எங்களுடைய அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் வாக்களிக்கும் போது எங்களுக்கு இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தோம். அது இந்த தேர்தலில் நிறைவேறி உள்ளது. முதன்முறையாக வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்’ என்றனர்.

The post கோவில்பட்டியில் ஆர்வமுடன் வாக்களித்த இளம் வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: