நெல்லை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் சந்தை சாலையில் நேற்று ஆடுகள் விற்பனை களைகட்டியது. கயத்தாறு பகுதியில் இருந்து மினி வேன்களில் வந்திறங்கிய ஆடுகள் உடனுக்குடன் விற்பனையாகின. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் நோக்கமே வறுமையில் வாடும் ஏழைகளுக்கு இறைச்சியை தானமாக வழங்க வேண்டும் என்பதாகும். எனவே இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள், மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை பலியிட்டு ஏழைகளுக்கு வழங்குவது வழக்கம். பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை நடப்பது வழக்கம். தென்மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டு சந்தை, நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தை ஆகியவற்றில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும். இச்சந்தைகளுக்கு விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் இருந்து கூட வியாபாரிகள் வருவர். இவ்வாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்டு சந்தைகள் அனைத்தும் மாதக்கணக்கில் மூடிக் கிடக்கின்றன.