கூடலூர் அருகே ஆளில்லாத வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை: 8 மணி நேரம் போராடி மயக்க ஊசி போட்டு பிடித்தனர்

கூடலூர்: கூடலூர் அருகே ஆளில்லாத வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை 8 மணி நேரத்துக்கு பின்் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த  மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பகுதியில் வசிக்கும் தங்கச்சன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள வீட்டிற்குள் நேற்று சிறுத்தை ஒன்று புகுந்தது. விவசாய நிலத்திற்குள் உள்ள இந்த வீட்டை வேலை செய்பவர்கள் தங்களது பொருட்களை வைக்கவும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக பணிக்கு சென்ற உடும்பன் என்பவர் கத்தியை தீட்டும் கல்லை எடுப்பதற்காக அந்த வீட்டுக்குள் சென்றார். அப்போது உள்ளே சிறுத்தை இருப்பதை பார்த்து உடனடியாக கதவை பூட்டி விட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வனத்துறையினர் வந்து சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கூடலூர் கோட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் அடங்கிய குழுவினர் சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு 8 மணி அளவில் வீட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சிறுத்தை மயக்கம் அடைந்ததை உறுதிப்படுத்திய பின்பு வனத்துறையினர் வலை போட்டு பிடித்தனர். 8 மணி நேரம் போராட்டத்துக்கு பின் மயங்கிய சிறுத்தையை பத்திரமாக கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். அது நல்ல உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்தபின் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கூடலூர் அருகே ஆளில்லாத வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை: 8 மணி நேரம் போராடி மயக்க ஊசி போட்டு பிடித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: