சென்னை: தமிழில் ‘வெப்பம்’ படத்தில் நடித்தவர், தெலுங்கு நடிகர் நானி. பிறகு தெலுங்கிலும், தமிழிலும் ஹிட்டான ‘நான் ஈ’ படத்தில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் அவர், முதல்முறையாக ‘தசரா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். வரும் 30ம் தேதி திரைக்கு வரும் இதில் நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காந்த் ஒதெலா இயக்கியுள்ளார். முக்கியமான வேடங்களில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா, ஜரீனா வஹாப் நடித்திருக்கின்றனர். லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து நானி கூறியதாவது: நான் நடித்துள்ள முதல் பான் இந்தியா படம் என்பதால் சற்று பதற்றமாக இருக்கிறது. எங்கள் படக்குழு அசுரத்தனமாக உழைத்திருப்பதால், படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எல்லாப் படங்களும் பான் இந்தியா படங்களாகி விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே பான் இந்தியா படங் களாகின்றன. ‘பாகுபலி’ 2ம் பாகத்தை பான் இந்தியா படம் என்று சொல்லலாம். இப்போது நான் நடித்துள்ள ‘தசரா’ படம் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.