பாட்னா: ஓடிடி தொடரில் ராணுவ வீரர்களை அவமதித்ததாக கூறி, சினிமா தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏக்தா கபூர் மற்றும் அவரது தாய்க்கு கைது வாரன்ட் பிறப்பித்து பீகாரில் உள்ள பெகுசராய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சாம்பு குமார், பெகுசராய் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘பிரபல சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏக்தா கபூர் தனது ‘டிரிபிள் எக்ஸ்’ என்ற தொடரில் ராணுவ வீரர்களின் மனைவி தொடர்பான காட்சிகளை ஆட்சேபகரமாக அமைத்துள்ளார். இது ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த தொடரின் சீசன் 2வில் மேற்கண்ட ஆட்சேப காட்சிகள் இடம் பெற்றுள்ளன’’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சாம்புகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஷிகேஷ் பதக், ‘‘இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏக்தா கபூர் மற்றும் அவரது தாய் ஷோபா கபூருக்கு சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை’’ என தெரிவித்தார். இதையடுத்து ஏக்தா கபூர் மற்றும் ஷோபா கபூருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.