அஜித் படத்துக்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுத்து என்ன பிரயோஜனம்? ஜி.வி.பிரகாஷ் மீது கங்கை அமரன் தாக்கு

சென்னை: அஜித்தின் ‘குட் பேட் அக்லீ’ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தி இருந்ததற்காக 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு இளையராஜா சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பாடல்களின் உரிமையை பெற்று இருக்கும் நிறுவனத்திடம் அனுமதி வாங்கி தான் பயன்படுத்தி இருப்பதாக ‘குட் பேட் அக்லீ’ தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுத்து இருந்தது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பேசியது: ஆரம்ப காலத்தில் நாங்கள் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தோம். அவர்கள் படத்தின் பூஜை அன்று பத்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். ஆனால் அதற்குப் பிறகு சில படங்களின் கேசட்டுகள் அதிகமாக விற்றாலும் எங்களுக்கு பணம் கிடைக்கவே இல்லை. அப்போதுதான் நாங்கள் இதுபோன்ற பிரச்னை இருப்பதையே அறிந்து கொண்டோம். பிறகு என்னுடைய அண்ணன் எந்த படமானாலும் அதற்கான இசை உரிமையை வாங்கிக் கொள்வார். இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி மேடையில் பாடுவதற்கு ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்.

அதற்கு நான் சண்டை போட்டேன். பிறகு மேடைகளில் தன்னுடைய பாடல்களை பாடுவதற்கு இளையராஜா தடை போடவில்லை. ஆனால் ஏழு கோடி ரூபாய்க்கு நீங்கள் ஒரு இசையமைப்பாளரை (ஜி.வி.பிரகாஷ்) வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாடல்களுக்கு கைதட்டு வராமல் எங்களுடைய பாடல்களுக்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அப்படி இருக்கும் போது கூலி எங்களுக்கு தானே வரவேண்டும். எங்களுடைய பெயரை போடாமல் மற்றொரு இசையமைப்பாளர்களுக்கு கோடிகள் கொடுத்தும் அவரால் நாங்கள் கொடுத்த இசையை கொண்டு வர முடியவில்லை. இளையராஜாவிடம் இந்த பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்று அனுமதி ஆரம்பத்திலேயே கேட்டிருந்தால் அவர் இலவசமாகவே கொடுத்திருப்பார். ஆனால் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதால் தான் அவர் கோபப்படுகிறார்.

இதனால் இளையராஜாவுக்கு பண ஆசை கிடையாது. எங்களிடமே அதிகமான பணம் இருக்கிறது. அதை எப்படி செலவு செய்வது என்று தான் நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். சிலர் இப்போ அஜித் படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாரே என்று கேட்கிறார்கள். அது முக்கியம் கிடையாது. உங்கள் இசையமைப்பாளரை வைத்து அப்படி இசையை கொடுக்க முடியவில்லை. இவ்வாறு கங்கை அமரன் பேசியுள்ளார். ‘குட் பேட் அக்லீ’ பட இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷால் ஹிட் கொடுக்க முடியாமல் தான் இளையராஜா பாடலை பயன்படுத்தி இருப்பதாக கங்கை அமரன் இப்படி நேரடியாக தாக்கி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: