கார்த்திகைப் பொரி

கார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காயின் சரவலையைச் சேர்க்கிறோம்.

தூய பக்திக்கு அடையாளமாக வெல்லத்தைச் சேர்க்கிறோம். வெண்பொடி பூசிய என்றும் தூயவனாகிய சிவபெருமானை நெல்பொரி குறிப்பிடுகிறது. வள்ளல் தன்மை கொண்ட மாவலியைத் தேங்காயின் சருவல் உணர்த்துகிறது. தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பது தத்துவம்.

*கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. ஒருமுறை அம்பிகை மகிஷாசூரனுடன் போர் புரிந்தபோது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டாள். அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய கார்த்திகை தீபம் ஏற்றி விரதம் இருந்தாள்.

*சிவபெருமான் ஜோதி வடிவமாகத் திருவண்ணாமலையில் வீற்றிருப்பது போலவே மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகக் காஞ்சிபுரத்தில் தீபப்பிரகாசர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார். பிரம்மா யாகம் செய்தபோது ஜோதி வடிவில் பெருமாள் விளங்கியதால் விளக்கொளிப் பெருமாள் என்று அவர் அழைக்கப்படுகிறார். வைணவர்கள் கார்த்திகை தீபத்தை விளக்கொளியில் பெருமாளுக்கு விளக்கேற்றிக் கொண்டாடுகின்றனர். இதற்கு பெருமாள் கார்த்திகை என்று பெயர்.

*கார்த்திகைக்கு முதல்நாள் பரணி தீபம். மாலை நேரத்தில் வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் வரிசையாக விளக்கு ஏற்றி வைத்தால் மகிழ்ச்சியான சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும் என்பது ஐதீகம்.

*பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகைத் திருவிழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கார்த்திகை பௌர்ணமி விழா அன்று ரங்கநாதர் சக்கரத்தாழ்வார் சந்நதியில் எழுந்தருளியிருப்பார். அப்போது கார்த்திகை கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனையை பெருமாள் முன்னிலையில் ஏற்றுவார்கள்.

பெருமாள் அக்காட்சியைக் கண்டருள்வார். பிறகு சந்தன மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கே அரையர்கள், திருமங்கையாழ்வார் பாடிய ‘வாடினேன்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடி, வரவிருக்கும் மார்கழி மாதத்திருநாளுக்காக நம்மாழ்வாருக்கு விவரமாக கடிதம் எழுதுவார்கள். இதனை ‘ஸ்ரீமுகப்பட்டயம்’ என்பர். நம்மாழ்வாருக்கு முகப் பட்டயம் எழுதியருளும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் பெருமாள் கோயிலுக்குச் செல்வார்.

*திருச்சிக்கு அருகிலுள்ள திருக்கரம்பனூர் உத்தமர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகைத் தீபத்திருநாளில் பெருமாளும், சிவனும் சேர்ந்து திருவீதி உலா வருகின்றனர்.

*வயலூர் முருகனுக்கு கார்த்திகை தீபத்திருநாளில் இரும்பால் செய்யப்பட்ட வேல் காணிக்கையாக வழங்கப்படுகிறது.*கார்த்திகைக்கு தீபங்களை ஏற்றிவிட்டு மூன்று முறை ‘தீபம் ஜோதி பரப்பிரம்மம்! தீபம் சர்வ தமோவஹம்! தீபே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே’ என்று இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். விசேஷமான பலன்கள் கிடைக்கும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

Related Stories: